இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு இன்று (18) தொடர்கிறது.
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவு வரை தொடரும் என தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்களத்தின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் ரயில் சேவைகளில் நிலவும் தாமதங்கள், ரத்து செய்யப்படும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
எனினும், தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தாலும், ரயில் சேவைகளை வழமைபோல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்கவின் தகவலின்படி, அலுவலக நேர ரயில்கள் உள்ளிட்ட பெரும்பாலான சேவைகள் திட்டமிட்டபடி இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பால் சில சேவைகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதால், பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்னர் தொடர்புடைய ரயில் நிலையங்களிடம் சேவை நிலை குறித்து உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.





