இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும், முன் மற்றும் பின் ஆசனங்களில் அமர்ந்து பயணிக்கும் அனைவரும் இன்று (19) முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும், சில வாகனங்களின் பின்புற ஆசனங்களில் சீட் பெல்ட் இல்லாத காரணத்தால் அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
பின்புற ஆசனங்களிலும் சீட் பெல்ட்களை பொருத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் நேற்று (18) நள்ளிரவுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது விதிமுறை கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளது.
சீட் பெல்ட் அணியாமல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் விபத்துக்களில் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களை குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





