போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹோர்முஸ் நீரிணையில் வணிக சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி, அமெரிக்கா வெள்ளிக்கிழமை (26) ஈரானின் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என BBC செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) வெளியிட்ட தகவலின்படி, சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த “Ever Lovely” என்ற சரக்குக் கப்பல் மீது வியாழக்கிழமை நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் களஞ்சியங்கள், கடலோர ரேடார் நிலையங்கள் ஆகியவை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, சர்வதேச வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதலுக்கு வழங்கப்பட்ட “வலுவான பதிலடி” என CENTCOM குறிப்பிட்டதுடன், இந்தச் சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான கடலோடிகளை வெளியேற்றும் திட்டமும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
எனினும், ஈரான் இந்தக் கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் அனுமதியற்ற பாதையை பயன்படுத்தியதால் இலக்காகக் கொள்ளப்பட்டதாக கூறியுள்ளது. மேலும், இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC), பொய்யான காரணங்களை முன்வைத்து அமெரிக்காவே போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றஞ்சாட்டியதுடன், அதற்கு பதிலடியாக பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 17 அன்று ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில் அமெரிக்காவும் ஈரானும் 14 அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணக்கம் கண்டிருந்த நிலையிலேயே இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், “வன்முறைக்கு வன்முறையால் பதிலளிக்கப்படும்” என எச்சரித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த வேளையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், “Ever Lovely” கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மோதல் காரணமாக அப்பகுதியில் சிக்கியிருந்த 11,000-க்கும் மேற்பட்ட கடலோடிகளை வெளியேற்றும் திட்டத்தை சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.





