இலங்கையில் ஆண்டுதோறும் 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் விபத்துகள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும், மேலும் சுமார் 30 இலட்சம் பேர் விபத்துகளால் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர் என்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒவ்வொரு 7 பேரில் ஒருவருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விபத்தால் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அபாயம் இருப்பதாகவும், ஒவ்வொரு நிமிடமும் 6 முதல் 8 பேர் வரை விபத்துகளுக்காக சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் ஏற்படும் மொத்த மரணங்களில் சுமார் 8% விபத்துகளால் நிகழ்வதாகவும், குறிப்பாக 15 முதல் 44 வயதுக்குட்பட்ட உற்பத்தித் திறன் கொண்ட வயதினரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
11வது தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், தவிர்க்கக்கூடிய விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைக்க தொடர்ச்சியான ஒருங்கிணைந்த செயற்திட்டங்கள் அவசியம் என வலியுறுத்தினார்.
இவ்வாண்டு ஜூலை 6 முதல் 10 வரை நாடு முழுவதும் நடைபெறும் தேசிய விபத்து தடுப்பு வாரத்தின் கருப்பொருள்கள்:
ஜூலை 6 – வீதி விபத்து தடுப்பு
ஜூலை 7 – பணியிட விபத்து தடுப்பு
ஜூலை 8 – வீடுகள் மற்றும் முதியோர் இல்லங்களில் விபத்து தடுப்பு
ஜூலை 9 – நீரில் மூழ்கி உயிரிழப்பைத் தடுப்பது
ஜூலை 10 – பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் விபத்து தடுப்பு
இந்த வேலைத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.





