இந்தியா தனது முதல் ஹைட்ரஜன் எரிபொருள் (Hydrogen-powered) பயணிகள் ரயிலை நேற்று (ஜூலை 17) அதிகாரப்பூர்வமாக சேவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 10 பெட்டிகள் கொண்ட ரயில், ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் (Jind) மற்றும் சோனிபட் (Sonipat) நகரங்களுக்கு இடையிலான 89 கிலோமீட்டர் பாதையில் இயக்கப்படுகிறது. இது 1,200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல் இயக்க முறைமை மூலம் இயங்குகிறது. இது உலகின் மிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் ரயில் இயக்க முறைமைகளில் ஒன்றாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இணைந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த தொழில்நுட்பத்தில், தண்ணீர் மற்றும் நீராவி மட்டுமே வெளியேற்றப்படுவதால், கார்பன் மாசுபாடு ஏற்படாது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த ரயிலின் முதல் பயணத்தை தொடங்கி வைத்து, இது “தன்னிறைவு இந்தியா மற்றும் நிலையான வளர்ச்சிக்கான முக்கியமான முன்னேற்றம்” என தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்காக சுமார் 12 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜிந்தில் நாட்டின் மிகப்பெரிய ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிமுகத்தின் மூலம், ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வரிசையில், ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பத்தை சோதித்து அல்லது பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது. (Newswire/CNA/AFP)





