பொத்துவில் கடற்பரப்பில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய இலங்கை மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடற்படைக்குச் சொந்தமான ‘விஜயபாகு’ கப்பல் மற்றும் விசேட படகுகளைப் பயன்படுத்தி நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பொத்துவில் கடற்பரப்பிற்கு அப்பால் ஆபத்தில் சிக்கியிருந்த படகில் இருந்த மீனவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
மீட்கப்பட்ட மீனவருக்கு ‘விஜயபாகு’ கப்பலில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டதையடுத்து, அவர் அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





