இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனைகளில், டெங்கு நுளம்புக் குடம்பிகள் அதிகளவில் பாடசாலை வளாகங்களிலேயே கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் ஜூன் வரை 250,477 வளாகங்கள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்பட்ட பாடசாலை வளாகங்களில் 42.5% இடங்களில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்பட்டுள்ளன.
அதேபோன்று, தொழிற்சாலைகளில் 38.4%, அரச நிறுவனங்களில் 28.1%, மத வழிபாட்டுத் தலங்களில் 25.9%, மற்றும் வீடுகளில் 9.2% இடங்களில் நுளம்புப் பெருக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, ஜூலை 17 ஆம் திகதி வரை நாட்டில் 74,478 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில், ஜூலை மாதத்தின் முதல் 17 நாட்களில் மட்டும் 19,100 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகி வருவதுடன், கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 15,596 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதால், இந்த ஆண்டின் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.





