இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 34 வயதான பிரித்தானிய பெண் நிஷிகா சமரதுங்க, தனது இரண்டு மகன்களை நீதிமன்ற உத்தரவின்படி அமெரிக்க தந்தையிடம் ஒப்படைக்கத் தவறியதைத் தொடர்ந்து, சர்வதேச குழந்தைகள் காவல் உரிமை விவகாரத்தில் தேடப்பட்டு வருகிறார்.
வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, 5 வயதான பிளேன் மற்றும் 3 வயதான நதானியல் ஆகிய இரு குழந்தைகளும், கடந்த மார்ச் 29ஆம் திகதி முதல் தாயுடன் காணாமல் போயுள்ளனர்.
குழந்தைகளின் தந்தையான பென் பேயர், குழந்தைகளை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்குமாறு லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், Autism நிலை கொண்ட இரு குழந்தைகளுக்கும் தேவையான கல்வி மற்றும் மருத்துவ பராமரிப்பு கிடைக்காமல் இருக்கலாம் என்ற கவலையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகளை கண்டுபிடிக்கும் நோக்கில் வழக்கு தொடர்பான தகவல்களை வெளியிட லண்டன் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், பிரித்தானியாவின் பல்வேறு அமைப்புகளுக்கும் அவர்களை கண்டறிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, அமெரிக்காவின் கொலராடோ நீதிமன்றம் குழந்தைகளின் முதன்மை காவல் உரிமையை தந்தைக்கு வழங்கியிருந்ததுடன், குழந்தைகள் ஆபத்தில் இருக்கக்கூடும் எனக் கருதி, அவர்களை சட்ட அமலாக்க அதிகாரிகள் பாதுகாப்பில் எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





