புதுடெல்லி:
இந்தியாவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்படும் “காக்ரோச்” (Cockroach) இயக்கத்தின் ஆதரவாளர்கள், காவல்துறை அனுமதி மறுத்த போதிலும், புதுடெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றுள்ளனர்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுடன், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் இடம்பெறும் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் காணப்படும் முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்திற்குப் பின்னர் இந்த இயக்கம் வலுப்பெற்றதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் அதிகளவான இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த போராட்டத்துடன் தொடர்புடைய சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், கல்வி முறையில் பொறுப்புணர்வு மற்றும் சீர்திருத்தங்களை கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், உடல்நிலை காரணமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
போராட்டக்காரர்கள் “தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும், ஊழல் மற்றும் வினாத்தாள் கசிவுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, நாடாளுமன்றப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





