கலைஞர்களை ஊக்குவிப்பதே கலாசார வளர்ச்சியின் அடித்தளம் – மேனகா புவிக்குமார்.

( மின்மினி மின்ஹா )

கலைஞர்களின் திறமைகளைப் பாராட்டி அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதன் மூலமே கலை மற்றும் கலாசாரத் துறையை மேலும் வலுப்படுத்த முடியும் என கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றத்தின் ஏற்பாட்டில்,(17) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் தேசகீர்த்தி ஏ.எல். தௌபீக் (JP) அவர்களைக் கௌரவிக்கும் விழாவில் பிரதம உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.சி.எம். ஜுவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றத்தின் போசகர் முக்கலாம் அப்துல் ஸமத் ஆலிம் அப்துல் மஜீத் (மக்கத்தார் ரஹ்) மற்றும் திருமதி மேனகா புவிக்குமார் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் எம்.வை. ராஷிக் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டதுடன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மொழித்துறை விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கிழக்கு மாகாண பணிப்பாளர் தனது உரையில், தேசகீர்த்தி ஏ.எல். தௌபீக் அவர்கள் இன, மத வேறுபாடுகளைக் கடந்து கலை மற்றும் கலாசாரப் பணிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருவதுடன், இளம் உத்தியோகத்தர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்வதாக அவர் பாராட்டினார்.

மேலும், நிகழ்வில் இசை நிகழ்ச்சியை வழங்கிய பாடகரின் இனிமையான குரல் வளம், இசைநயம் மற்றும் கலைத்திறனை அவர் சிறப்பாகப் பாராட்டினார். தமது தொழில் மற்றும் பணிப் பொறுப்புகளுக்கு மத்தியிலும் கலைத்துறைக்காக நேரம் ஒதுக்கி சமூகத்திற்கு பங்களிப்பு வழங்கும் கலைஞர்கள் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் கிடைத்த பெருமை என்றும் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய கீதங்கள் ஊடாக ஆன்மீக விழுமியங்களையும் மனிதநேயச் செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி பாராட்டத்தக்கது என்றும், கலை சமூகத்தில் நல்லிணக்கத்தையும் ஒழுக்க விழுமியங்களையும் வலுப்படுத்தும் ஆற்றல் மிக்க ஊடகமாக விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வுக்கு தம்மை அழைத்து கௌரவித்த ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றத்தின் நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்த அவர், கலை மற்றும் கலாசார வளர்ச்சிக்கான இத்தகைய முயற்சிகளுக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

நிகழ்வின் நிறைவில் தேசகீர்த்தி ஏ.எல். தௌபீக் (JP) அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து கிழக்கு மாகாண கலாசார திணைக்கள பணிப்பாளர் மேனகா புவிக்குமார் அவர்களும் பாராட்டுப் பத்திரம், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இறுதியில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore