தென் கொரியா: மிச்சலின் (Michelin) இரண்டு நட்சத்திரங்களை பெற்றுள்ள பிரபல உணவகத்தின் உரிமையாளர், இனிப்புகளில் அலங்காரமாக எறும்புகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்குமாறு தென் கொரிய அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரிய சட்டத்தின்படி, மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள பூச்சி இனங்களின் பட்டியலில் எறும்புகள் இடம்பெறவில்லை. எனினும், கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 49,000 எறும்புகள் பல்வேறு உணவுகளிலும், குறிப்பாக இனிப்பு வகைகளின் (Sorbet) மேல் அலங்காரமாக பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பயன்படுத்தப்பட்ட எறும்புகளில் அனுமதிக்கப்பட்ட உணவுப் பூச்சிகளை விட 55 மடங்கு அதிக அளவில் கன உலோகங்கள் (Heavy Metals) காணப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், உணவக உரிமையாளர் தனது தரப்பில், எறும்புகள் 15 வகை உணவுகள் கொண்ட மெனுவில் ஒரு சிறிய பகுதியிலேயே பயன்படுத்தப்பட்டதாகவும், விருப்பமில்லாத வாடிக்கையாளர்களுக்கு உண்ணக்கூடிய மலர்கள் மற்றும் பிற மாற்று அலங்காரங்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளிலும் எறும்புகள் உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை செப்டம்பர் 2 ஆம் தேதி நீதிமன்றம் வழங்கவுள்ளது.





