இலங்கையின் நாளாந்த பால் தேவையில் 43% மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், தற்போது ஆண்டுக்கு 410 மில்லியன் லீற்றராக உள்ள உற்பத்தியை 1,200 மில்லியன் லீற்றராக உயர்த்துவதற்காக, இவ்வாண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், நிக்கவெரட்டிய விலங்கு வளர்ப்புப் பண்ணையை அபிவிருத்தி செய்வதற்காக கூடுதலாக 1,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் நாட்டுக்குத் தேவையான உயர்தர இனப் பசுக்களை உருவாக்கும் மையப் பண்ணையாக நிக்கவெரட்டிய பண்ணையை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான பல அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், உள்நாட்டு பால் பண்ணையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன வலியுறுத்தினார்.





