தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், எதிர்வரும் ஜூலை 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் சில பொதுமக்கள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து வலய, மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களிலும், ஊழியர் சேமலாப நிதி (EPF) தரவுக் கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் EPF சேவைகளுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் குறித்த இரண்டு நாட்களில் வழங்கப்படமாட்டாது.
அதேவேளை, EPF கொடுப்பனவுகள் வழங்குதல், பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளும் அன்றைய தினங்களில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த இரண்டு நாட்களுக்காக முன்கூட்டியே நேரம் ஒதுக்கியுள்ள பொதுமக்கள், ஒரு மாத காலத்திற்குள் எந்தவொரு அலுவலக நாளிலும் தங்களுக்கு உரிய தொழில் அலுவலகத்திற்குச் சென்று தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.





