மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை இடம்பெற்ற கார் – லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில், மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற கார் ஒன்றும், கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் காரணமாக மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டனர்.
விபத்தில், கதிர்காமம் நோக்கி பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேரும், லொறியில் பயணித்த மூவரும் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





