2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் 138,730 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 31,734 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த வருகையில் 23 சதவீதமாக பதிவாகியுள்ளது.
மேலும், பிரித்தானியாவில் இருந்து 14,959 பேரும், சீனாவிலிருந்து 8,484 பேரும், நெதர்லாந்திலிருந்து 8,415 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதேவேளை, 2026 ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,285,303 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து 325,417 பேரும், பிரித்தானியாவில் இருந்து 123,526 பேரும் வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில், 2026 ஜனவரி முதல் ஜூன் வரை சுற்றுலாத்துறையின் ஊடாக நாட்டிற்கு 475.6 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், ஜூன் மாதத்தில் மட்டும் 50.5 பில்லியன் ரூபாய் சுற்றுலா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





