Facebook Messenger, Instagram, WhatsApp மற்றும் Telegram போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தும் நபர்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் ‘Sextortion’ (பாலியல் மிரட்டல் மூலம் பணம் பறிக்கும்) மோசடிகள் மீண்டும் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு அணி (SLCERT) எச்சரித்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த மோசடிகளுக்கு இந்தியாவை தளமாகக் கொண்ட குழுக்கள் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், அண்மையில் பணம் இலங்கையிலுள்ள தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கும் அனுப்புமாறு கோரப்படுவதால், உள்ளூர் தொடர்புகளும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த மோசடி பொதுவாக, இளம் பெண்ணின் பெயரில் உருவாக்கப்பட்ட Instagram கணக்கிலிருந்து “Hi” என்ற எளிய செய்தியுடன் தொடங்குகிறது. பின்னர் நம்பிக்கையை ஏற்படுத்தி, WhatsApp காணொளி அழைப்பிற்கு அழைத்து, தனிப்பட்ட மற்றும் ஆபாச காட்சிகளை பதிவு செய்து, அதை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
ஆரம்பத்தில் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கோரப்படும் நிலையில், பின்னர் அது இலட்சக்கணக்கான ரூபாயாக உயர்த்தப்படுவதாக SLCERT தெரிவித்துள்ளது.
எனவே, சமூக ஊடகங்களில் தெரியாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்கள் அல்லது புகைப்படங்களை பகிர வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான காணொளி அழைப்புகளில் ஈடுபட வேண்டாம் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றால் உடனடியாக SLCERT அல்லது பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





