இலங்கையின் கடற்பரப்புகளில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றிவளைப்புகளில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
ஜூலை 16 முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளில், கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நிலாவெளி சல்பாறு கடற்பகுதியில் மேற்கொண்ட முதலாவது சுற்றிவளைப்பில், தடைசெய்யப்பட்ட முறையில் வின்ச் மற்றும் டிராக்டர் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டர்களும் கைப்பற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு கடற்பகுதிகளில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டதுடன், 17 சிறிய படகுகள் மற்றும் ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளின் கீழ் இடம்பெற்ற இந்த நடவடிக்கைகள் சல்பாறு, துடுவ, புறா தீவு, சுதைக்குடா, ஆலம்பில், சிலாவத்துறை, யாழ்ப்பாணம் கடைக்காடு கேவில், தலைமன்னார் வங்காலபாடு மற்றும் கல்பிட்டி இப்பந்தீவு உள்ளிட்ட கடற்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட படகுகள், வாகனங்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் கடல் அட்டைகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.





