நுகர்வோர் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், 2026 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 471 மருந்தகங்களில் விசேட திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 109 மருந்தகங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், அவற்றில் 86 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
மேலும், 2026 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை நாடளாவிய ரீதியில் 362 மருந்தகங்கள் பரிசோதிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மைய நடவடிக்கையுடன் சேர்த்து இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த விசேட சோதனைகளின் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்குகளின் மூலம் ரூ.22,69,500 அபராதம் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
சோதனைகளின் போது காலாவதியான மருந்துகள், கட்டாய நுகர்வோர் தகவல்கள் இல்லாத மருந்துப் பொருட்கள், நுகர்வோர் தகவல் விதிமுறைகளை மீறிய பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், குழந்தைப் பயன்பாட்டு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தொடர்பான சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டன.
மேலும், காலாவதியான மாத்திரைகள், ஊசி மருந்துகள், சிரிஞ்சுகள், கிரீம்கள், கர்ப்பப் பரிசோதனை கருவிகள், குழந்தைப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அவை தொடர்புடைய நீதவான் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.





