இந்தியா | ஆகஸ்ட் 06, 2026
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடகப் பதிவு தவறுதலாக கட்டுப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, Meta நிறுவனம் இந்திய அரசிடம் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.
Meta நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி ஜோயல் கப்லான், இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம், “பிரதமரின் பதிவு கட்டுப்படுத்தப்பட்டமை தொழில்நுட்பப் பிழையால் ஏற்பட்டது. அதற்காக Meta சார்பில் மன்னிப்பு கோருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜோயல் கப்லான் உள்ளிட்ட Meta நிறுவனத்தின் உயரதிகாரிகள், இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளுடன் சுமார் 45 நிமிடங்கள் கலந்துரையாடல் நடத்தினர்.
கடந்த ஜூலை 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட காணொளி, Facebook மற்றும் Instagram தளங்களில் தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தது. பின்னர் அது மீண்டும் மீளப் பதிவேற்றப்பட்டதுடன், இந்த நீக்கம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறு என Meta விளக்கமளித்தது.
எனினும், Meta வழங்கிய இந்த விளக்கத்தை இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் “போதுமானதல்ல” என தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய பாராளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழுத் தலைவர் நிஷிகாந்த் துபே, “இது ஒரு இடைநிலை (Intermediary) நிறுவனத்தின் செயல் அல்ல; பதிப்பகத்தின் (Publisher) செயல் போன்றது. மார்க் சக்கர்பெர்க் மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும்” என வலியுறுத்தினார்.
உலகளவில் Meta நிறுவனத்திற்கு மிகப்பெரிய பயனாளர் சந்தையாக இந்தியா காணப்படுவதால், இந்த விவகாரம் அரசியல் மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.





