இலங்கையில் உரிமம் இல்லாமல் செயல்படும் வெளிநாட்டு இணைய சூதாட்ட சேவைகளுக்கு எதிராக இணையதளங்களை முடக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், இதனால் மட்டும் இணைய சூதாட்ட சந்தையை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என ஆய்வாளர் டாக்டர் சஞ்சன ஹட்டோட்டுவ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உரிமம் பெறாததாக அடையாளம் கண்டுள்ள 24 இணைய சூதாட்ட சேவைகளின் இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL), தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அவற்றை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
1xBet, Melbet, Betway, Bet365, Linebet, Coldbet, Megapari, Mostbet, WinWin உள்ளிட்ட பல இணைய சூதாட்ட தளங்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
டாக்டர் சஞ்சன ஹட்டோட்டுவின் ஆய்வின்படி, இணைய சூதாட்ட விளம்பரங்கள் இணையதளங்களில் மட்டுமன்றி Facebook பக்கங்கள், குழுக்கள், WhatsApp தொடர்புகள் மற்றும் பணப் பரிமாற்ற முகவர்கள் ஊடாகவும் பரவலாக இடம்பெறுகின்றன.
அவரது ஆய்வில் Facebook மற்றும் நான்கு வெளிநாட்டு சூதாட்ட இணையதளங்களில் இருந்து 10,813 பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான பயனர்களை கொண்ட சூதாட்ட தொடர்பான பக்கங்கள் மற்றும் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இணையதளங்களை முடக்கியாலும், புதிய டொமைன்கள், மாற்று இணைப்புகள், VPN சேவைகள் மற்றும் சமூக ஊடக வழிகள் மூலம் பயனர்கள் மீண்டும் அணுகும் வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இணைய சூதாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு இணையதளங்களை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், விளம்பரதாரர்கள், சமூக ஊடக கணக்குகள், இணைப்பு முகவர்கள் (affiliates), பணப் பரிமாற்ற வழிகள் மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட முழுமையான வணிக வலையமைப்பையும் கண்காணிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உரிமம் பெற்ற சூதாட்ட நிறுவனங்கள், அவற்றின் இணையதளங்கள், செயலிகள், சமூக ஊடக கணக்குகள் மற்றும் பணப் பரிமாற்ற முறைகள் தொடர்பான வெளிப்படையான பதிவேடு உருவாக்கப்பட வேண்டும் எனவும் ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.





