பிரித்தானியா | ஆகஸ்ட் 12
பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸில் உள்ள Camber Sands கடற்கரையில் கடலில் சிக்கிய 18 வயதுடைய பிரித்தானிய-இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7.00 மணியளவில், மூவர் கடலில் சிக்கியுள்ளதாக அவசர சேவைகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு கடலோர காவல்படை, உயிர்காக்கும் படகு மற்றும் அவசர மருத்துவ சேவையினர் விரைந்து சென்றுள்ளனர். சுமார் 30 நிமிடங்களின் பின்னர் 18 வயதுடைய இளைஞர் கடலில் இருந்து மீட்கப்பட்ட போதிலும், மருத்துவ உதவியாளர்களின் முயற்சிகளுக்கு மத்தியில் அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஆரம்பத்தில் உயிரிழந்தவர் 24 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்திருந்த நிலையில், பின்னர் அவரது வயது 18 என உறுதிப்படுத்தப்பட்டது.
அவருடன் இருந்த 16 வயதுடைய சிறுவனும் 24 வயதுடைய மற்றொரு நபரும் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளனர். மூவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும், லண்டனிலிருந்து குறித்த கடற்கரைக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், உயிரிழப்பில் சந்தேகத்திற்கிடமான காரணங்கள் எதுவும் இல்லை என Sussex பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை Coroner முன்னெடுக்கவுள்ளார்.





