கொழும்பு, ஆகஸ்ட் 13, 2026 – இலங்கைக்கும் ஓமனுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
ஓமன் வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஆலோசகர் பங்கஜ் கிம்ஜி, ஓமன் தூதுவர் அஹ்மத் பின் அலி பின் சயீத் அல் ரஷீதி ஆகியோர், வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை அடையாளம் காண்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக விவசாயம் மற்றும் எரிசக்தித் துறைகளில் இலங்கையில் முதலீடு செய்வதில் ஓமன் ஆர்வம் கொண்டுள்ளதாக பங்கஜ் கிம்ஜி தெரிவித்துள்ளார். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பரிமாற்றத்தை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, இலங்கையில் பல்வேறு துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துரைத்ததுடன், Ceylon Shipping Corporation உள்ளிட்ட துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு ஓமன் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இலங்கையுடன் இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஒன்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் ஓமன் ஆர்வம் தெரிவித்துள்ளது.
இந்த முன்மொழிவை வரவேற்ற அமைச்சர் வசந்த சமரசிங்க, இது தொடர்பில் பரிசீலிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் வணிக கூட்டாண்மைகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பரஸ்பர ஆர்வம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் K. A. விமலேந்திரராஜா மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் பணிப்பாளர் சரித யட்டோகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.





