கம்பஹா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 42ஆவது தேசிய மீலாத்-உன்-நபி அரச விழாவை முன்னிட்டு இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத ஸ்தலங்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன், வெவ்வேறு சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், இஸ்லாமிய சமய மற்றும் கலாசார விவகாரங்கள் துறையும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
இதேவேளை, தேசிய மீலாத்-உன்-நபி விழாவை முன்னிட்டு “Welcome to Our Mosque” என்ற நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு முஸ்லிம் பள்ளிவாசல்களின் வரலாறு, கலாசாரம் மற்றும் வழிபாட்டு முறைகளை நேரில் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ள தகவலின்படி, பரஸ்பர புரிந்துணர்வு, மரியாதை மற்றும் நட்புறவை வளர்த்து, ஐக்கியமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான நல்லிணக்க முயற்சிகளில் அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஓகஸ்ட் 24ஆம் திகதி காலை 9.30 மணி முதல் பெரியமுல்லை ஜும்மா மஸ்ஜித் மற்றும் நீர்கொழும்பு பள்ளிவாசல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





