வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய H-1B விசா கட்டணத்தை 103,265 அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதற்கான புதிய விதிமுறையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.
தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகள் பெரிதும் பயன்படுத்தும் H-1B விசாக்களுக்கான செலவு இதன் மூலம் பாரியளவில் அதிகரிக்கவுள்ளது.
முன்னதாக இந்தக் கட்டண உயர்வை நீதிமன்றம் தற்காலிகமாகத் தடுத்திருந்தது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய கட்டணம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படவுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய விதிமுறை இறுதி ஒப்புதலைப் பெறக்கூடும்.
H-1B திட்டத்தின் கீழ் சிறப்புத் திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஆண்டுதோறும் 65,000 விசாக்களும், உயர் பட்டதாரிகளுக்காக மேலும் 20,000 விசாக்களும் வழங்கப்படுகின்றன.
முன்னதாக 2,000 முதல் 5,000 டொலர்கள் வரையில் இருந்த H-1B விசா தொடர்பான கட்டணம் தற்போது 100,000 டொலர்களுக்கும் அதிகமாக உயர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தை அமெரிக்க நிறுவனங்கள் மலிவான வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதற்காக தவறாக பயன்படுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவிக்கிறது. எனினும், திறமையான பணியாளர்களின் பற்றாக்குறையை சமாளிக்க H-1B திட்டம் அவசியமானது என வர்த்தக அமைப்புகள் தெரிவிக்கின்றன.





