ஈரானின் உலகளாவிய பொருளாதார தொடர்புகளைத் துண்டிக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய மற்றும் விரிவுபடுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
ஈரான் மீது முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் மூலம், ஈரானுடன் நிதி மற்றும் வர்த்தக தொடர்புகளைத் தொடரும் நாடுகள், வங்கிகள் மற்றும் நிறுவனங்களும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு உள்ளாகலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஈரானின் பொருளாதார அமைச்சர் அலி மதனிசாதே, புதிய தடைகளை எதிர்கொள்ள ஈரான் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், அவை அமெரிக்காவுக்கு மற்றுமொரு தோல்வியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் புதிய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. சீனாவும், தடைகள் மற்றும் அழுத்தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது எனக் குறிப்பிட்டுள்ளது.
புதிய அமெரிக்க நடவடிக்கைகளின் கீழ் டிஜிட்டல் சொத்துகள், தொழில்நுட்பம், தங்கம், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளதுடன், சுமார் 60 நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கப்பல்கள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரான்–அமெரிக்க மோதலால் உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதிக்கப்படுவது உலக சந்தையில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





