அமெரிக்கா, சிரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.
பல தசாப்தங்களாக அமலில் இருந்த இந்தப் பட்டியலிலிருந்து சிரியா நீக்கப்பட்டுள்ளமை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.
இதனுடன், சிரியாவில் முன்னர் செயற்பட்ட அல்-நுஸ்ரா முன்னணி என அழைக்கப்பட்ட ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் (HTS) அமைப்பின் மீதான பயங்கரவாத அமைப்பு தொடர்பான அமெரிக்காவின் வகைப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிரியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த சில பொருளாதாரத் தடைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் சிரியாவில் முதலீடுகளை அதிகரித்து, நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் சர்வதேச பொருளாதார அமைப்புடன் மீண்டும் இணைவதற்கும் உதவும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
13 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு, இந்த முடிவு பொருளாதார ரீதியாக புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என அந்நாட்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





