மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக, இலங்கையில் நடைமுறையில் உள்ள QR எரிபொருள் விநியோக முறை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்காக QR முறைமை தொடர்ந்தும் அவசியமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
QR முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் டீசல் பயன்பாடு 10% மற்றும் பெட்ரோல் பயன்பாடு 9% குறைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போதைய உலகளாவிய எண்ணெய் விலை ஏற்ற இறக்க நிலை தொடர்வதால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) QR முறையை மேலும் சில காலம் தொடரும் எனவும் அவர் கூறினார்.
“எண்ணெய் நெருக்கடி இன்னும் தீரவில்லை. நாட்டின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாமல் நிலைமையை நிர்வகிப்பதற்காக இந்த முறை தொடர்கிறது” என அமைச்சர் தெரிவித்தார்.





