சம்மாந்துறை ஹைர் ஜும்மா பள்ளிவாசலில் ரபியுல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு சுமார் 12 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற மார்க்க சொற்பொழிவு (பயான்) நிகழ்வுகளுக்கு ஊடக அனுசரணை வழங்கிய ‘சம்மாந்துறை TREND’ மற்றும் ‘சமூகம் TV’ ஆகிய ஊடக நிறுவனங்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (26) புதன்கிழமை பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
ஹைர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் மஹல்லாவாசிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு, பள்ளிவாசலின் பொறுப்பு நம்பிக்கையாளரும் ஓய்வுபெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எஸ். அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

ரபியுல் அவ்வல் மாதத்தின் சிறப்பை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மார்க்க சொற்பொழிவுத் தொடரில் பல்வேறு உலமாக்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இம்மார்க்க உரைகளைப் பெருந்திரளான மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், சம்மாந்துறை TREND மற்றும் சமூகம் TV ஆகிய இரு ஊடக நிறுவனங்களும் இணைந்து தொடர்ச்சியான நேரலை ஒளிபரப்புச் சேவையை வழங்கியிருந்தன.

தொடர்ச்சியாக 12 நாட்கள் இடம்பெற்ற மார்க்க சொற்பொழிவுகளைச் சீரிய முறையில் நேரலையாக ஒளிபரப்பி, நற்செய்திகளைச் சமூகத்திற்குக் கொண்டு சேர்த்த இவ்வூடகங்களின் சேவையைப் பாராட்டி, நிகழ்வின் போது சிறப்பு கௌரவிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டன.
பள்ளிவாசல் நிர்வாகத் தலைவரும் அல் முனீர் பாடசாலையின் அதிபருமான ஏ. ரஹீம், செயலாளர் அப்துல் ரஹீம், கணக்காய்வாளர் அன்வர் சிராஜ் மற்றும் நிர்வாகத்தினர் முன்னிலையில் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மார்க்க சொற்பொழிவுகளை நிகழ்த்திய உலமாக்களுக்கும் விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






