அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் Meta Platforms நிறுவனம் அதிகபட்சமாக 16.68 பில்லியன் அமெரிக்க டொலர் வரை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook மற்றும் Instagram தளங்கள் சிறுவர்களை அதிக நேரம் பயன்படுத்தத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகவும், அவற்றின் பாதுகாப்பு தொடர்பில் பயனர்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாகவும், குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்கள் உரிய அனுமதியின்றி சேகரிக்கப்பட்டதாகவும் அமெரிக்காவின் 29 மாநிலங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன.
இந்த உடன்பாட்டின் கீழ், குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் நேரத்திற்கு தினசரி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், இரவு நேரப் பயன்பாட்டிலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகிறது. வயது வரம்புக்குட்பட்ட உள்ளடக்கங்களை குழந்தைகள் அணுகுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேலும் வலுப்படுத்தப்படவுள்ளன.
எவ்வாறாயினும், இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொண்டபோதிலும், Meta நிறுவனம் தாம் எந்தத் தவறும் செய்ததாக ஒப்புக்கொள்ளவில்லை.
மேலும், Cambridge Analytica விவகாரம் தொடர்பாக கலிபோர்னியா, இல்லினாய்ஸ், நியூ மெக்சிகோ மற்றும் Washington D.C. ஆகிய நான்கு நிர்வாகப் பகுதிகளுடன் தொடர்புடைய தனியுரிமை வழக்குகளும் இந்த உடன்பாட்டின் மூலம் தீர்க்கப்படுகின்றன. இதற்காக அந்தப் பகுதிகளுக்கு 459.3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் Meta உள்ளிட்ட பல முன்னணி சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவில் இன்னும் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன.





