முன்னாள் பாகிஸ்தான் பிரதமரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் சிறை நிலைமை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் உலகில் இருந்து தொடர்ந்து ஆதரவுக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ், இம்ரான் கானுக்கு உரிய மனிதாபிமானத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி மேற்கொள்ளப்பட வேண்டிய மருத்துவப் பரிசோதனை தடையின்றி நடைபெற வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினர் தொடர்ந்து சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிரெக் சாப்பல், இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளார். நீண்டகால சிறைவாசம் மற்றும் தனிமைப்படுத்தல் அவரது உடல் மற்றும் மனநலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், திலீப் வெங்சர்கர் உள்ளிட்ட 22 முன்னாள் சர்வதேச வீரர்கள், இம்ரான் கானுக்கு உரிய மருத்துவப் பராமரிப்பும் மனிதாபிமானமான அணுகுமுறையும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1992 ஆம் ஆண்டு பாகிஸ்தானை முதல்முறையாக கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்லச் செய்த அணியின் தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராகவும் பதவி வகித்திருந்தார்.





