”மனித உயிர் காப்போம்… சமூகத்தைப் பாதுகாப்போம்…”
என்ற உன்னத கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, அம்பாறை மாவட்ட உயிர் காப்புக் குழுவுடன் இணைந்து, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாம் கட்டப் பயிலுனர்களுக்கான முதலுதவி பயிற்சி நெறி (2026.08.29) திகதி சம்மாந்துறை காதி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள கலாசார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.



அம்பாறை மாவட்ட உயிர் காப்புக் குழுவுடன் இணைந்து, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில்
நடைபெற்ற இப் பயிற்சி நெறியில், சம்மாந்துறை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டாம் கட்டப் பயிற்சிக்காகத் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முன்வந்து ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இடம்பெற்ற இப் பயிற்சி நெறியில், அனர்த்த நிலைமைகளின் போது எவ்வாறு உயிர்களைப் பாதுகாப்பது, முதலுதவி வழங்குவது மற்றும் அவசர கால மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இப் பயிற்சி நெறியை முதலுதவி பயிற்றுவிப்பாளர் K. T.ரோகினி அவர்கள் மிகச் சிறப்பாக நடாத்தினார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.எம். றியாஸ் மற்றும் உயிர் காப்புக் குழுவின் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இப்பயிற்சியின் அவசியம் குறித்து உரையாற்றினர்.
எதிர்பாராத அவசரச் சம்பவங்களின் போது முதலுதவி வழங்கும் முறைகளின் முக்கியப் பங்கு குறித்தும், மாணவர்கள் அதனை முறையாகக் கற்றுக்கொள்வதன் தேவை குறித்தும் அவர்கள் தமது உரைகளில் வலியுறுத்தினர்.
இப் பயிற்சியில் கலந்துகொண்ட பயிலுனர்கள் அவசர கால மீட்பு முறைகளை ஆர்வமுடன் கற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.









