நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள அனர்த்தத்தையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கையிலிருந்து நிவாரணக் குழுக்களை அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதற்காக இலங்கை பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய நிவாரணக் குழுக்களை நேபாளத்திற்கு அனுப்புவது தொடர்பில் திட்டமிடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நேபாளத்திற்கு நிவாரண உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு, அந்நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப எந்த வகையான நிவாரணக் குழுக்களை அனுப்புவது என்பது தொடர்பில் அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நிவாரணப் பணிக்காக அனுப்பப்படவுள்ள படையினரின் எண்ணிக்கை மற்றும் குழுக்களின் தன்மை இதுவரை இறுதி செய்யப்படவில்லை என பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேபாளம் எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலைமையில், தெற்காசிய அண்டை நாடாக இலங்கை மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





