ஈரானின் முக்கிய கடற்பகுதியான ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள லாரக் தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை ஏவுதளங்களை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் இராணுவத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்துக்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட முதல் நேரடி இராணுவ நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையை நோக்கி கடல்சார் கண்ணிவெடிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த ஈரானிய புரட்சிகர காவல்படையினர் தயாராகி வருவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன், இதற்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளை நோக்கி ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், ஜோர்தான் வான்பரப்புக்குள் நுழைந்ததாக கூறப்படும் எட்டு ஈரானிய ஏவுகணைகள் அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா–ஈரான் இடையிலான புதிய இராணுவ நடவடிக்கைகள் காரணமாக பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.





