இலங்கையின் நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில், திறந்த நீதிமன்ற விசாரணைகளின்போது சாட்சியங்களை பதிவு செய்வதற்கான புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊடகமான சிலுமின வெளியிட்டுள்ள தகவலின்படி, குறித்த செயலி Voice Typing தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாட்சிகளின் வாக்குமூலங்களை துல்லியமாக எழுத்து வடிவில் பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு சாட்சியின் குரலையும் தனித்தனியாக அடையாளம் காணும் வசதியும் இந்த செயலியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், குறித்த சாட்சி மீண்டும் சாட்சியமளிக்கும் போது ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கு அறிக்கைகள் மற்றும் சட்டக் குறிப்புகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக வழக்குகள் பலமுறை ஒத்திவைக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையைத் தவிர்த்து, நீதிமன்ற நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களில் புதிய செயலியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





