இலங்கையில் முதலாவது தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டின் உணவுப் பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இக்கொள்கை, ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தக் கொள்கை, உணவு உற்பத்தி முதல் நுகர்வு வரையிலான முழு உணவுச் சங்கிலியிலும் ஆபத்து அடிப்படையிலான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு அணுகுமுறையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம் உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு முறைமைகளை மேம்படுத்துதல், ஆபத்து மதிப்பீடு மற்றும் தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், ஆய்வக வசதிகளை மேம்படுத்துதல், உணவுப் பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்துதல் மற்றும் உற்பத்தியாளர்கள், உணவு வணிகர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், உணவினால் ஏற்படும் நோய்களைக் குறைத்தல், நுகர்வோர் நம்பிக்கையை அதிகரித்தல், சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துதல், சுற்றுலாத்துறைக்கு ஆதரவளித்தல் மற்றும் இலங்கையின் உணவு மற்றும் விவசாயத் துறையின் போட்டித்திறனை வலுப்படுத்துதல் ஆகியனவும் இக்கொள்கையின் எதிர்பார்க்கப்படும் முக்கிய பயன்களாகும்.
தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கையின் நடைமுறைப்படுத்தலுக்கு ஆதரவாக, புதுப்பிக்கப்பட்ட உணவுச் சட்டம் (Food Act) தொடர்பான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இக்கொள்கை நடைமுறைப்படுத்தலில் ஆறு முக்கிய முன்னுரிமைப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன:
🔹 உணவுப் பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு
🔹 முழு உணவுச் சங்கிலியிலும் உணவுப் பாதுகாப்புக் கட்டுப்பாடு
🔹 சட்டங்கள், தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை முறைமைகளை வலுப்படுத்தல்
🔹 கண்காணிப்பு, ஆய்வகங்கள் மற்றும் ஆபத்து பகுப்பாய்வை மேம்படுத்தல்
🔹 விழிப்புணர்வு, கல்வி மற்றும் திறன் மேம்பாடு
🔹 கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறைமைகளை வலுப்படுத்தல்
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு முறைமையை நவீனமயப்படுத்துவதில் இந்தக் கொள்கை முக்கியமான மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





