இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லொறியின் பின்புறத்தில் தமிழக பதிவு இலக்கத்தைக் கொண்ட கார் ஒன்று நேற்று இரவு சுமார் 11.40 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் கார் கடுமையாக சேதமடைந்ததுடன், அதில் பயணித்தவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவல் கிடைத்ததும் பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழகத்தின் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கிப் பயணித்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து லொறியில் மோதியிருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில், விபத்துக்கான சரியான காரணம் தொடர்பில் கேரள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





