ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் அஸூர் எயார் விமான நிறுவனம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ரஷ்யாவின் ஐந்து விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், எரோஃப்ளோட் மற்றும் S7 உள்ளிட்ட ரஷ்ய விமான நிறுவனங்களும் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் லண்டன் கெட்விக் விமான நிலையத்துக்கும் கொழும்புக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





