அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையைத் தாண்டி விபத்துக்குள்ளான அமேசான் சரக்கு விமானம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
21 Air நிறுவனத்தினால் இயக்கப்பட்ட Boeing 767-300 ரக சரக்கு விமானமே விபத்துக்குள்ளானது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கிய பின்னர் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையின் முடிவைக் கடந்து அருகிலிருந்த வீதி மற்றும் வாகனங்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் இருந்தவர்களா அல்லது தரையில் இருந்தவர்களா உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர் என்பது தொடர்பில் ஆரம்ப கட்டத்தில் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை (NTSB) அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விமானம் ஓடுபாதையில் உரிய தரையிறங்கும் பகுதியில் தரையிறங்கியதா அல்லது அதற்கு அப்பால் தரையிறங்கியதா என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தீப்பிடித்த நிலையில், 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். சில காயமடைந்தவர்கள் வாகனங்களுக்குள் அல்லது அவற்றின் கீழ் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற நேரத்தில் மியாமி பகுதியில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் நிலவியதாக விமானப் போக்குவரத்து கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. விமானம் ஓடுபாதையின் பயன்படுத்தக்கூடிய பகுதியை விட்டு வெளியேறியபோது சுமார் 112 knots (மணிக்கு 207 கிலோமீற்றர்) வேகத்தில் பயணித்ததாக FlightRadar24 தரவுகள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குப் பின்னர் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், மேலும் பல விமானங்கள் தாமதமடைந்தன.
விபத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் மாற்று விமானங்களைப் பெற நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமேசான் மற்றும் விமானத்தை இயக்கிய 21 Air நிறுவனம் ஆகிய இரண்டும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளன.
விபத்துக்கான உண்மையான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், விமானத்தின் தரையிறக்கம், வானிலை நிலை, விமானத்தின் வேகம் மற்றும் ஓடுபாதையில் அதன் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





