கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருட்களுடன் இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 39 வயதுடைய தாய்லாந்து பிரஜைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தாய்லாந்தில் உள்ள இறைச்சிக் கடையொன்றில் பணியாற்றி வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இன்று அதிகாலை சுமார் 12.00 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலைய வருகை முனையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் வெளியேறுவதற்காக ‘Green Channel’ வழியாகச் செல்ல முற்பட்டபோது சுங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களின் பயணப் பொதிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, இரண்டு பயணப் பொதிகளுக்குள் வைட்டமின் பொருட்கள் அடங்கிய 16 கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், திராட்சைப் பசை போன்ற தோற்றத்தில் பொலித்தீன் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 641 கிராம் ‘ஹஷீஷ்’ போதைப்பொருளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





