இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானத்தில் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் அவர் இலங்கையை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் செப்டம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு உத்தியோகபூர்வ சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
இவ்விஜயத்தின் முக்கிய நோக்கம் இலங்கை – இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவதுமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான உடன்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.





