இலங்கையிலுள்ள பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் கணினிகள், Projectors, Smart Boards உள்ளிட்ட டிஜிட்டல் கல்வி உபகரணங்களை முறையாக பராமரித்து பழுதுபார்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மட்டத்தில் வன்பொருள் மற்றும் வலையமைப்பு பராமரிப்புப் பணிகளுக்காக விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தின் 13 கல்வி வலயங்களுக்காக ஏற்கனவே 76 ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 2026 ஒக்டோபரில் மேலும் ஒரு குழுவினருக்கு விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளது.
மேலும், டிஜிட்டல் கல்வி உள்கட்டமைப்பை பழுதுபார்ப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுகளின் ஊடாக மாகாணங்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
குறிப்பாக வடமேல், கிழக்கு மற்றும் வட மாகாணங்கள் உள்ளிட்ட மாகாணங்களுக்கு 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உத்தரவாதக் காலம் நிறைவடைந்த உபகரணங்களை குறைந்தபட்ச செலவில் பழுதுபார்ப்பதற்கும், இந்த பராமரிப்புப் பணிகளில் மாணவர்களையும் மாகாண மட்டத்தில் பயிற்றுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.





