குழந்தைகளுடன் உடல் ரீதியான தொடர்பு ஏற்படுத்தும்போது, அவர்களின் சம்மதத்திற்கும் தனிப்பட்ட எல்லைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என சிறுவர் உரிமைகள் செயற்பாட்டாளர் வைத்தியர் துஷாரா விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவொன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவர், வழக்கமாக குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் ‘நல்ல தொடுதல் – தவறான தொடுதல்’ என்ற கருத்துடன், குழந்தைக்கு அந்தத் தொடுதலை ஏற்றுக்கொள்ளும் அல்லது மறுக்கும் உரிமையும் கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
குழந்தையின் விருப்பத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு உடல் தொடர்பும், அவர்களின் உரிமைகளை மீறும் செயலாக அமையக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் சுமார் 40,000 கையெழுத்துகள் அடங்கிய மனுவொன்று கையளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிறுவன் ஒருவரின் தோள்களில் கைகளை வைப்பதற்கு முன்னர், “உங்கள் தோள்களில் கைகளை வைக்கலாமா?” எனக் கேட்டதாக வைத்தியர் துஷாரா விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு தங்களது சம்மதத்தை தெரிவிக்கும் அல்லது மறுக்கும் உரிமை வழங்குவது, அவர்களை வலுப்படுத்துவதுடன், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளையும் அவர் விமர்சித்துள்ளதுடன், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவர்கள் “இல்லை” எனக் கூறும் உரிமை தொடர்பில் பெரியவர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வயதுக்கேற்ற பாலியல் கல்வியை கட்டாயமாக்குவதுடன், குழந்தைகளின் தனிப்பட்ட எல்லைகளை மதிப்பது தொடர்பில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைத்து பெரியவர்களுக்கும் கூடுதல் விழிப்புணர்வு அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





