எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று கொழும்பில் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகளை இரு தரப்பினரும் எடுத்துரைத்துள்ளனர்.
தொடர்ச்சியான, நெருக்கமான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு தொடர்புகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இத்தகைய ஒத்துழைப்பு இரு நாடுகளினதும் பரஸ்பர நலன்களுக்கு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு தொடர்பான ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய நிலவரங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு விடயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
இலங்கை – இந்திய உறவு பரஸ்பர மரியாதை, இறையாண்மை சமத்துவம், நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் வலுப்படுத்தப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளின் மக்களுக்கிடையிலான நீண்டகால நட்பையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கு அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவதன் அவசியத்தை இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.





