காலாவதியான 400 கிராம் தேயிலைப் பொதியை ரூ.1,000க்கு விற்பனை செய்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் குறித்த நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 15.07.2026 அன்று காலாவதியானதாகக் குறிப்பிடப்பட்ட 400 கிராம் தேயிலைப் பொதி ஒன்று ரூ.1,000க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1875/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட கட்டளை இலக்கம் 52 மீறப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த கட்டளையின் பிரகாரம், காலாவதியான, விற்பனைக்கு தகுதியற்ற அல்லது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுடன் சேர்த்து அல்லது அவற்றுக்கு அருகில் வைத்திருப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இவ்வாறான மீறல்கள் தொடர்பில் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





