இத்தாலியின் துரின் நகரிலுள்ள காசெல்லே விமான நிலையத்தில், பயணி ஒருவரின் சூட்கேஸில் இருந்து அழியும் ஆபத்திலுள்ள அரிய வகை முதலையின் தலை ஒன்று அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மியாமியிலிருந்து இஸ்தான்புல் ஊடாக இத்தாலிக்கு வந்த பயணியின் சாமான்களை சோதனையிட்டபோது, முழுமையாக உலர்த்தப்பட்ட முதலைத் தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது சாதாரண பொதியிடும் காகிதத்தால் சுற்றப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முறையான சான்றிதழ்கள் அல்லது அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனத்தைச் சேர்ந்த முதலையை கடத்தியதாக குறித்த நபர் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் ரூ.2.20 கோடி அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அழியும் நிலையில் உள்ள விலங்குகளின் சட்டவிரோத வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் CITES (Washington Convention) விதிகளின் கீழ் முதலைகள் பாதுகாக்கப்படும் உயிரினங்களாக உள்ளன.
அமெரிக்காவின் புளோரிடாவில் சில நினைவுப் பரிசுக் கடைகளில் உலர்ந்த முதலைத் தலைகள் விற்பனை செய்யப்பட்டாலும், அவற்றை சர்வதேச எல்லைகளை கடந்து உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்வது சட்டவிரோதமாகும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.





