கடந்த ஓகஸ்ட் மாதம், உலக வரலாற்றில் இதுவரை பதிவான மிக அதிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) தெரிவித்துள்ளது.
கோபர்நிகஸ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஓகஸ்ட் மாதத்தில் பூமியின் உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்று வெப்பநிலை 16.96°C ஆக பதிவாகியுள்ளது.
இது தொழில்துறைக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 1.65°C அதிகமாகும். இதன் மூலம் 2023 ஜூலை மாதத்துடன் இணைந்து, பதிவுகளில் மிகவும் வெப்பமான மாதமாக ஓகஸ்ட் அமைந்துள்ளது.
மேலும், கடந்த மாதத்தில் உலகின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம், நிலச்சரிவு, காட்டுத்தீ மற்றும் வறட்சி உள்ளிட்ட தீவிர காலநிலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும், இந்தோனேசியா, கிரீஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீயும், ஹங்கேரி மற்றும் ருமேனியாவில் நிலவிய கடுமையான வறட்சியும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இதனிடையே, பூமியின் பெருங்கடல்களிலும் வழக்கத்திற்கு மாறான அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கோபர்நிகஸ் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
எண்ணெய், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம், தற்போதைய காலநிலை மாற்றத்தின் முக்கிய காரணிகளில் ஒன்றாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.





