யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, துன்னாலை பகுதியில் நேற்று (09) இரவு இடம்பெற்ற கொடூர தாக்குதலில் 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, உயிரிழந்த நபருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாக தனிப்பட்ட பகைமை இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு குறித்த நபரை நால்வர் கொண்ட குழுவினர் பின்தொடர்ந்து, ஓராங்கட்டை பகுதியில் வைத்து அவர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நால்வரும் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





