காலாவதியான பேக்கரி உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு விற்பனைக்காக காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில் பேக்கரி நிறுவனமொன்றுக்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, குறித்த நிறுவனம் தம்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின்போது, 2026 ஏப்ரல் 16ஆம் திகதி காலாவதியாகியிருந்த ஸ்ட்ராபெரி சுவையூட்டப்பட்ட கிரீம் பணிஸ் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதையடுத்து குறித்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
காலாவதியான உணவுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.
மேலும், உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதன் உற்பத்தித் திகதி மற்றும் காலாவதித் திகதியை சரிபார்த்து கொள்வது அவசியம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





