முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்களின் மத மற்றும் கலாசார ஆடைகள் தொடர்பில் அரச நிறுவனங்களில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு, அரசியலமைப்புக்கு இணங்க நிரந்தரத் தீர்வொன்றை வழங்குமாறு கோரி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனைக் கிளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனைக் கிளைத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். முர்சித் (முப்தி) கையொப்பமிட்டுள்ள எட்டு பக்கங்களைக் கொண்ட இக்கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில், கல்முனைத் தொகுதியைச் சேர்ந்த முஸ்லிம் சமயத் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட புத்திஜீவிகள் கலந்துகொண்டனர்.
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அரச நிறுவனங்களில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்களின் மத மற்றும் கலாசார ஆடைகள் தொடர்பில் அடிக்கடி ஏற்படும் சிக்கல்களுக்கு, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையிலும் அரசியலமைப்புக்கு இணங்கிய வகையிலும் நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும் என்பதே இக்கடிதத்தின் பிரதான கோரிக்கையாகும்.





