சிறையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 நிலக்கரி சரக்குகளில் சுமார் 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கணக்கில் இல்லையென நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த நிலக்கரியின் மதிப்பு சுமார் ரூ.4.62 பில்லியன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
19 நிலக்கரி சரக்குகள் தொடர்பான பதிவுகளை ஆராய்ந்தபோது, சுமார் 120,000 மெட்ரிக் தொன் அளவிலான பற்றாக்குறை இருப்பதாக தெரியவந்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த அளவு நிலக்கரி சுமார் இரண்டு கப்பல் சரக்குகளுக்கு சமமானது என சுட்டிக்காட்டிய அவர், இவ்வளவு பாரிய அளவிலான நிலக்கரி எவ்வாறு கணக்கில் இல்லாமல் போனது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகள், வரி விதிப்புகள், பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வாக்குறுதிகள், அரிசி இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அவர் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
மேலும், கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொள்கலன்கள் மற்றும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தவறான கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
எனினும், 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கணக்கில் இல்லையென முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மேலதிக விசாரணைகள் அல்லது அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகவில்லை.





